April 2, 2012

சிதம்பரம் நடராஜர் மீது திருநாவுக்கரசர் பாடிய பதிகம் 

















அரியானை அந்தணர் தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை அணுவையார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைக்கடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே!
மற்றாரும் தன்னொப்பார் இல்லா தானை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானை பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
வளர்மதியம் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தாள் அமர்ந்து காண 
அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

அருந்தவர்களே தொழுதேத்தும் அப்பன் தன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன் தன்னை
மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையும் திசைகள் எட்டும்
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவும் மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகன்ஞாலத்து அகத்துள் தோன்றி
வருந்துணையும் சுற்றமும் பற்றும்விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவாரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போகமாற்றிப்
பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை
அருமறையோடு ஆறங்கம் ஆயினானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

வரும்பயனை எழுநரம்பின் ஓசையானை
வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயம் செய் அவுணர் புரமெரியக் கோத்த 
அம்மானை அலைகடல் நஞ்சயின்றான் தன்னைச் 
சுரும்ப மருங்குழல் மடவார் கடைக்கண்நோக்கில்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

காரானை யீருரிவைப் போர்வை யானைக் 
காமருபூங் கச்சியே கம்பன் தன்னை 
ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை
அமரர்களுக்கு அறிவரிய அளவிலானைப் 
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

முற்றாத பால்மதியம் சூடி னானை
மூவுலகும் தானாய முதல்வன் தன்னைத்
செற்றார்கள் புரமூன்றும் செற்றான் தன்னைத் 
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்குற்ற
குற்றாலத் தமர்ந்துறையும் குழகன் தன்னைக்
கூத்தாட வல்லானைக் கோளை ஞானம்பெற்றா
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

காரொளிய திருமேனிச் செங்கண் மாலும்
கடிக்கமலத் திருந்தவனும் காணா வண்ணம்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழொளியைச் சிந்தைதன்னை மயக்கம் தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகும் கடந்தண்டத்து அப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 

No comments: